பாலு: ஒரு கியூபிக் மீட்டர் கேஸ் கூட சப்ளை செய்யப்படவில்லை- தியோரா
மேலும் இன்று வரை அவரது நிறுவனங்களுக்கு ஒரு கியூபிக் மீட்டர் கூட கேஸ் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தனது மகன்களின் காஸ் கம்பெனிகளுக்கு குறைந்த விலையில் காஸ் சப்ளை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பெட்ரோலித்துறை அமைச்சருக்கு சிபாரிசு செய்துள்ளார். பாலு தனது பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதில் பாலுவுக்கு ஆதரவாக பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் சிபாரிசு கடிதம் சென்றுள்ளது என்று கூறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக, பாஜக ஆகியவை கடந்த 5 நாட்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும், பிரதமர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் போர்க் கொடி உயர்த்தின.
இந் நிலையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். டி.ஆர்.பாலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன் மற்றும் கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு காஸ் சப்ளை கடந்த பாஜக ஆட்சியில் 2004, ஜனவரி 14ல் ரத்து செய்யப்பட்டது.
அந்நிறுவனங்களுக்கு காஸ் ஒதுக்கி நீதி வழங்க வேண்டும் என்று அதன் தலைவர் டி.ஆர்.பாலு பிரதமரிடம் கடந்த 2005 மே மாதம் மனு கொடுத்தார். இந்த மனுவை பரிசீலித்து ஆய்வு நடத்தியது பிரதமர் அலுவலகம். காஸ் வழங்குவது சாத்தியமில்லை என்று பெட்ரோலிய அமைச்சகத்தின் முடிவை பிரதமர் அலுவலகம் ஏற்றுக் கொண்டது.
இதை எதிர்த்து அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தனது மகன்களுக்கு சொந்தமான நிறுவனங்களன் தொழிலாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு நியாயம் வழங்க வேண்டும் வேண்டும் என்று பாலு என்னை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டார். அவர் கேட்டுக் கொண்டாலும் இன்று வரை ஒரு கியூபிக் மீட்டர் சிலிண்டர் கூட வழங்கவில்லை.
பிரதமர் அலுவலகத்துக்கு வரும் மனுக்களை பரிசீலித்து முடிவு செய்யும்படி அந்தந்த துறைக்கு அனுப்புவது வழக்கம். அதுபோலதான் பாலு நிறுவனம் தொடர்பான மனுவையும் பரிசீலித்து முடிவு செய்யும்படி பிரதமர் அலுவலகம் குறிப்பு அனுப்பியது.
பாலுவின் குடும்பத்தாருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு உதவும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவோ பரிந்துரையோ வரவில்லை என்றார் தியோரா.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங் நிருபர்களிடம் கூறுகையில், பாலுவின் விவாகரத்தில் வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடக்கவில்லை என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், அமைச்சர்கள், அனைத்துக் கட்சி எம்பிக்கள் பிரதமருக்கு சிபாரிசு கோரி கடிதம் எழுதுவது வழக்கமான ஒன்று. அதே போல பாலுவும் எழுதினார். ஆனால், அவரது கோரிக்கையை பிரதமர் அலுவலகம் ஏற்கவில்லை. இதனால் கேஸ் தரப்படவே இல்லை. இந் நிலையில் தான் கேஸ் தரப்பட்டதாக பொய் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது பாஜக.
லஞ்சம் வாங்கி கேமரா முன் பிடிபட்ட பாஜக தலைவர் பண்டாருவையும் தெஹல்கா ஊழலில் ஜார்ஜ் பெர்னாண்டஸை காப்பாற்றியதும் இதே பாஜக தான்.
இதனால் பாலு எப்படி கடிதம் எழுதலாம் என்று 'மாரல் ஹைகிரவுண்டில்' ஏறி நிற்க பாஜகவுக்கு அருகதையே கிடையாது என்றார்.