மன்னார் புலிகள் முகாம் பிடிபட்டது-ராணுவம்
கொழும்பு: இலங்கையின் வட பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய முகாமை கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மன்னார் அருகே சாத்தான் குளம்- கறுக்காய்குளம் பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
விமானப்படை உதவியுடன் இந்த தாக்குதலை ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகளாலும் கடும் தாக்குதலை ராணுவம் மேற்கொண்டது. விடுதலைப் புலிகள் தரப்பிலும் கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் புலிகள் தரப்பில் 40க்கும் மேற்பட்டோரும், ராணுவத் தரப்பில் 7 பேரும் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த மோதலுக்குப் பின்னர் விமலா பேஸ் என்கிற முகாமை ராணுவம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.