பஸ்சுடன் மோதி கவிழ்ந்த பெட்ரோல் டேங்கர்
சேலம்: விமானங்களில் பயன்படுத்தப்படும் ஒயிட் பெட்ரோல் லோடு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியும் அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிகொண்டன. இதில் லாரி கவிழ்ந்து அதிலிருந்து பெட்ரோல் வெளியேறி வருவதால் அங்கு தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணத்திற்கு இன்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டு சென்றது. சென்னையில் இருந்து கோவைக்கு டேங்கர் லாரி ஒன்று வந்தது.
அயோத்தியாபட்டணம் அருகே அரசு பஸ்சை டிப்பர் லாரி வேகமாக ஒன்று கடந்து சென்றது. இதனால் நிலை தடுமாறிய பஸ் எதிரில் வந்த டேங்கர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் டேங்கர் லாரி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகள் ராமலிங்கம் (45), முருகப்பன் (35), அண்ணாதுரை (35), கார்த்திக் (20), ஜெயகுமார் (40), சாரதா (28), புவனேஸ்வரி (35), லாவண்யா (16) ஆகியோர் சேலம் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர்.
பள்ளத்தில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் வெளியேறி வருகிறது. விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் இந்த ஒயிட் பெட்ரோலின் மதிப்பு ரூ. 8 லட்சமாகும். இதில் டேங்கர் லாரி டிரைவர் சேகர் (33) உயிர் தப்பினார்.
லாரி தீப்பிடிக்காததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்த காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை, எஸ்ஐ முருகேசன் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதுகுறித்து கோவை பெட்ரோலிய துறை அதிகாரிகளுக்கும், சேலம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அதிகாரி ஆனந்த் தலைமையில் மீட்புபடை வீரர்கள் தீவிபத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோவை பெட்ரோலிய அதிகாரிகள் வந்தால்தான் டேங்கர் லாரியை பாதுகாப்பாக அகற்ற முடியும் என்பதால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.