குடிநீர் சப்ளை- திமுக கவுன்சிலர்கள் தர்ணா
திருச்சி: குடிநீர் விநியோகம் இல்லாததை கண்டித்து மணப்பாறையில் திமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திமுக தலைமையிலான நகராட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் நகராட்சி தலைவர் சரோஜா தலைமையில் கூட்டம் நடந்தது. அப்போது தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து திமுக கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
பாலாம்பாள் நகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய பகிர்மான குழாய் அமைத்தும் தண்ணீர கிடைப்பதில்லை. தீரம்பட்டி மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்ய உடனே நடவடிக்கை எடுக்கு வேண்டும். தண்ணீர் சப்ளையை காங்கிரசைச் சேர்ந்த கவுன்சிலர்களே தடுக்கின்றனர்.
கட்சி பேதம் பார்க்காமல் சீராக குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்று கூறி திமுக கவுன்சிலர்கள் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி தலைவி சரோஜா மற்றும் அதிகாரிகள் கூறியதை அடுத்து திமுக கவுன்சிலர்கள் தர்ணாவை கைவிட்டனர். திமுக தலைமையிலான நகராட்சியில் திமுக கவுன்சிலர்களே தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.