தாலியை விற்று 'கள்ளக்காதல் ஜாலி'-பெண் கைது
சென்னை: தாலியை விற்று, கள்ளக்காதலனுடன் டூர் போன பெண்ணைப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பெரவள்ளூர் ஜவகர் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது32). எஸ்.டி.டி. பூத் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுகன்யா (25).
சில தினங்களுக்கு முன்பு இவர் தனது தாய் வீட்டுக்குப் போனார். பின்னர் வீடு திரும்பியதும், மர்ம நபர் தனது 4 பவுன் தங்கத் தாலியை திருடிச் சென்று விட்டதாக கூறி பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜன்துரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின்போது பல சந்தேகங்கள் எழுந்தன. இந் நிலையில் விசாரணைக்கு சுகன்யா வரவில்லை. மாறாக தலைமறைவாகி விட்டார்.
இந் நிலையில் ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் மீது அவரது மாமனார் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது மகளை விட்டு விட்டு வேறு ஒரு கல்யாணமான பெண்ணுடன் லட்சுமணன் குடும்பம் நடத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.
'கணக்குப் போட்ட' போலீஸார் சுகன்யாவுக்கும், லட்சுமணனுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு வந்தனர். இதையடுத்து லட்சுமணன் வீட்டுக்குச் சென்றபோது அங்கு சுகன்யா இருந்தது கண்டு அதிர்ந்தனர்.
போலீஸாரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகன்யா, கட்டிலுக்கு அடியில் பதுங்கினார். அவரை வெளியே அழைத்து அவரிடமும், லட்சுமணனிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது தாலிச் சங்கிலி திருடு போகவில்லை என்றும், லட்சுமணனும் தானும் காதலித்து வருவதாகவும், தாலியை விற்று மதுரை, கொடைக்கானலுக்கு சுற்றுலா போனதாகவும் உண்மையைக் கக்கினார்.
இதையடுத்து தனது மனைவி மீது நடவடிக்கை எடுக்குமாறு சுகன்யாவின் கணவர் பாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன் பேரில் சுகன்யாவையும், லட்சுமணனையும் போலீஸார் கைது செய்தனர்.