'ஹிண்ட்ராப்' மனோகரன் சிறையில் எம்.எல்.ஏவாக பதவியேற்பு
கோலாலம்பூர்: ஹிண்ட்ராப் தலைவர் மனோகரன், தான் அடைக்கப்பட்டுள்ள முகாமிலேயே எம்.எல்.ஏவாக பதவியேற்கவுள்ளார்.
மனோகரன் உள்ளிட்ட ஐந்து ஹிண்ட்ராப் நிர்வாகிகள் கடந்த ஆண்டு உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மனோகரன் ஹிண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர் ஆவார். ஐந்து பேரும் கமுன்டிங் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மனோகரன் செலாங்கூர் மாகாணத்தில் உள்ள கோடா ஆலம்ஷா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது கட்சியான ஜனநாயக நடவடிக்கைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டவை கோரின. ஆனால் அதை மலேசிய அரசு நிராகரித்து விட்டது.
ஆனால் தான் வெளியில் விடப்பட்டால்தான் எம்.எல்.ஏ. பதவியை ஏற்பேன் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார் மனோகரன். இந்த நிைலயில் முகாமிலேயே பதவியேற்றுக் கொள்ள அவர் தீர்மானித்துள்ளார்.
அவருடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் முகாமிலேயே எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவுள்ளனர். இதுகுறித்து செலாங்கூர் மாவட்ட சட்டசபை சபாநாயகர் டெங் சாங்க் கிம் கூறுகையில், மனோகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் முகாமிலேயே பதவியேற்றுக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மே 8ம் தேதி அவர் கோடா ஆலம்ஷா தொகுதியின் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனோகரனின் மனைவி புஷ்பநீலா கூறுகையில், நான் மகிழ்ச்சியாக உள்ளேன். வெள்ளிக்கிழமை நான் முகாமுக்கு செல்கிறேன். பதவியேற்புக்காக புதிய சூட் மற்றும் டையையும் உடன் எடுத்துச் செல்கிறேன்.
எனது கணவரை மட்டும் அல்ல, உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80 பேரையும் அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனோகரன் உள்ளிட்ட ஐந்து ஹிண்ட்ராப் நிர்வாகிகளும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.