லோக்சபாவில் ரகளை: 32 எம்.பிக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!
டெல்லி: லோக்சபாவில் பெரும் ரகளையில் ஈடுபட்டு, சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட 32 எம்.பிக்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ரகளையில் ஈடுபடுவதும், கூச்சல், குழப்பத்தில் ஈடுபடுவதும், சபாநாயகர் இருக்கை முன்பு கூடி அமளி செய்வதும் வாடிக்கையாகி விட்டது.
கேள்வி நேரம் டார்ச்சர் நேரமாகி விட்டது என்று சோம்நாத் சாட்டர்ஜி விரக்தியுடன் கூறும் அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 32 எம்.பிக்களுக்கு, சபையில் அமளி செய்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி சோம்நாத் சாட்டர்ஜி, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 24ம் தேதி விலைவாசி உயர்வு பிரச்சினையை கிளப்பி தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, அமளியில் ஈடுபட்ட 32 எம்.பிக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேற்று இதுகுறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற உரிமைக் குழுவுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உரிமைக் குழுவை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள எம்.பிக்களில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் 23 பேர் ஆவர். மற்றவர்கள் பகுஜன் சமாஜ் கட்சி, சிரோண்மனி அகாலிதளம், பிஜூ ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
எம்.பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
பாஜக கண்டனம்:
ஆனால் சோம்நாத் சாட்டர்ஜியின் நடவடிக்கைக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில், இது மிகவும் பாரபட்சமான நடவடிக்கை என்றார்.