சென்னையில் கார் உற்பத்தியை அதிகரிக்கும் போர்ட்
சென்னை: என்ஜின் மற்றும் கார் உற்பத்தி பிரிவை விரிவாக்கம் செய்ய போர்டு கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து போர்டு மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான மைக்கேல் போனஹம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் போர்டு கம்பெனி விரிவு செய்யப்படும். கார் மற்றும் என்ஜின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்படுகிறது. தற்போது உற்பத்தி செய்யப்படும் ஒரு லட்சம் கார், அடுத்த இரண்டாண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்.
அடுத்த 2 ஆண்டுகளில் என்ஜின் உற்பத்தி பிரிவு மூலம் வெளிநாடுகளுக்கு உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யப்படும். இந்த விரிவாக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் நேரடியாக 2000 பேருக்கும் மறைமுகமாக பல ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த முதல் கட்ட விரிவாக்கத்தின் மூலம் என்ஜின் உற்பத்தி தொழிற்கூடம் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும். அடுத்த கட்ட விரிவாக்கத்தின்போது வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி தொடங்கும் என்றார்.