சைவ-வைணவ மோதல் காட்சி: தசாவதாரத்துக்கு' விஎச்பி எதிர்ப்பு
ராமேஸ்வரம்: தசாவதாரம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் அந்தப் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என விஸ்வ இந்து பரிஷத் எச்சரித்துள்ளது.
இந்த அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணை முழுமையாக நிறைவடையும் வரையில் ராமர் பாலம் பகுதியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
கமலஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் சினிமாவில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி உள்ளனர்.
அப்போது இந்து கடவுள்களின் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சியையும் அவர்கள் சேர்த்திருப்பதாக தெரிகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
சர்ச்சைக்குரிய இந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் படத்தை வெளியிட விடமாட்டோம். தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்துவோம்.
பிரியங்கா-நளினி சந்திப்பு அரசியலில் சில சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது அதேபோல தீன்பிகார்' என்ற தீவை வங்காளதேசத்திற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்திய பகுதிகளை பிற நாடுகளுக்கு விட்டுக் கொடுப்பது தேச பாதுகாப்புக்கு நல்லதல்ல. இந்த நிலை மாற மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார்.