திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை
திருமலை: திருப்பதியில் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமலை அருள்மிகு வெங்கடாஜலபதி கோயிலில் புகையிலை தடையை தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ராமாச்சாரி கூறுகையில், திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. கோயிலுக்கு அதிகமாக வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை போட்டு செல்கின்றனர். திருமலையை தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு இது கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதங்கள் இனி பிளாஸ்டிக் கவர்களில் தரப்படமாட்டாது. கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும். படிப்படியாக திருமலை முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக அகற்றப்படும் என்று தெரிவித்தார்.