'விறு விறு' கத்திரி - 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்!
சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் எதிர் வரும் நாட்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் அளவும் படிப்படியாக உயரும் என்றும் அது எச்சரித்துள்ளது.
கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் நேற்று நல்ல வெயில் அடித்துள்ளது. அதிகபட்ச வெயில் சென்னையில் 107 டிகிரியாக பதிவாகியுள்ளது.
வேலூரிலும் இதே அளவில்தான் வெயில் இருந்தது. கடலூரில் 106 டிகிரியும், திருச்சியில் 105 டிகிரியும், வெயில் பதிவாகியது.
மதுரை, நெல்லை ஆகிய நகரங்களிலும் 100 டிகிரியைத் தாண்டி வெயில் இருந்தது.
மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று 100 டிகிரியைத் தாண்டித்தான் வெயிலின் அளவு இருந்தது.
வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கும் எனவும் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.