பாஸ்போர்ட் மாயம் எதிரொலி: கொடுத்த பாஸ்போர்ட்டுகளை மாற்றும் தூதரகம்
துபாய்: துபாய் இந்தியத் துணைத் தூரகதத்திலிருந்து அனுப்பப்பட்ட காலி பாஸ்போர்ட்டுகள் தொலைந்து போனதைத் தொடர்ந்து சில குறிப்பிட்ட சீரியல் எண் கொண்ட பாஸ்போர்ட்டுகளை ஒப்படைத்து விட்டு புதிய பாஸ்போர்ட்டுக்களைப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
துபாய் துணைத் தூதரகத்திலிருந்து கடந்த ஆண்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட காலி பாஸ்போர்ட்டுகள் 500 காணாமல் போய் விட்டன. இவை திருடப்பட்டு தீவிரவாதிகள் கைக்குப் போயிருக்கலாம் என சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளை திரும்பக் கொடுத்து விட்டு புதிய பாஸ்போர்ட்டுக்களைப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி இசட்-0000001 முதல் இசட்- 045925 வரை சீரியல் எண்களைக் கொண்ட பாஸ்போர்ட்டுக்களைப் பெற்றோர் அவற்றை எங்கு பெற்றார்களோ, அங்கு கொடுத்து விட்டு புதிய பாஸ்போர்ட்டுக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவை இலவசமாகவே செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள், மேற்கொண்ட சீரியல் எண்களைக் கொண்ட பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்தால் அவற்றை துபாய் துணைத் தூதரகத்தில் ஒப்படைத்து விட்டு புதிய பாஸ்போர்ட் பெறலாம். இதற்காக அங்கு சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூரியர் மூலமும் இவற்றைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.