நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: சுதந்திர போராட்ட தியாகியும், காந்தியவாதியுமான நிர்மலா தேஷ்பாண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற இரு சபைகளும் இன்று ஒத்தி வைக்கப்பட்டன.
லோக்சபா இன்று தொடங்கியவுடன் கடந்த மே 1ம் தேதி காலமான தியாகி நிர்மலா தேஷ்பாண்டேவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது இரங்கல் அறிக்கையை சபாநாயகர் படித்தபோது, தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து வாய்மீது விரல் வைத்து நின்றனர்.
சபையில் கூச்சலிட்டதற்காக 32 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து உரிமைக்குழுவுக்கு சபாநாயகர் பரிந்துரை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் இவ்வாறு நடந்து கொண்டனர்.
கேள்வி நேரம் தொடங்கியவுடனேயே சமாஜ்வாதி உறுப்பினர் ராம்ஜிலால் சுமன் எழுந்து, வடஇந்தியர்களுக்கு எதிராக நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே நடத்தி வரும் போராட்டம் பற்றிய பிரச்னையை கிளப்பினார். அதேசமயத்தில் தெலுங்கு தேச எம்பி எர்ரண்நாயுடுவும் எழுந்து பேசமுயன்றார்.
இதையடுத்து சபையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு சபாநாயகர் வெளியேறினார்.
இதேபோல், ராஜ்யசபாவிலும் இன்று காலையில் தியாகி நிர்மலா தேஷ்பாண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு சபை நிகழ்ச்சிகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
27 இட ஒதுக்கீடு-லோக்சபாவில் விவாதம்:
இந் நிலையில் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கிரீமி லேயர் என்று கூறப்படும் வசதி படைத்தோருக்கு இட ஒதுக்கீடு கூடாது என நீதிமன்றம் வழங்கியுள்ள தீ்ர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இட ஒதுக்கீட்டின் பயன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டுமானால் இந்த கிரீமி லேயர் நிபந்தனையை நீக்க வேண்டும் என்று பாஜக தவிர்த்த பிற கட்சிகள் கோரி வருகின்றன.
இந் நிலையில் இது குறித்து இன்று முக்கிய விவாதம் நடக்க இருந்தது. அவை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் இந்த விவாதம் நடக்கலாம்.