கர்நாடகத்தில் பாஜக ஆட்சி-லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு
கர்நாடக சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இந் நிலையில் சென்னை லயோலா கல்லூரியின் தகவலியல் மற்றும் மக்கள் ஆய்வு அமைப்பின் மாணவர்கள் கர்நாடக மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தினர்.
பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் மாணவர்கள் 28 மாவட்டங்களில் உள்ள 75 சட்டசபை தொகுதிகளில் வசிக்கும் 3,669 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தினர்.
இந்த கருத்து கணிப்பு அறிக்கையை அகில இந்திய கத்தோலிக்க மாணவர்கள் ஒருங்கிணைப்பு ஆலோசகர் ஹென்றி ஜெரோம் இன்று வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கர்நாடகத்தில் பாஜகவுக்கு 36.1 சதவீத ஆதரவும், காங்கிரஸ் கட்சிக்கு 31 சதவீத ஆதரவும் உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு சுமார் 10.9 சதவீத ஆதரவும் உள்ளது.
எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு பாஜகவுக்கு 36 சதவீதத்தினரும், காங்கிரசுக்கு 31 சதவீதத்தினரும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 15 சதவீதத்தினரும், மற்ற கட்சிகளுக்கு 2.3 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.
27 சதவீதம் பேர் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் மக்களின் அடிப்படை பிரச்சினை தீர்க்கப்படாது என்று நொந்து போய் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தின் முக்கிய பிரச்சினை விலைவாசி உயர்வு என 34 சதவீதம் பேரும், வேலைவாய்ப்பு இல்லை என 5 சதவீதம் பேரும், கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரப்படவில்லை என்று 11 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல்வராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற கேள்விக்கு பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு 37.8 சதவீதம் பேரும், காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு 20 சதவீதத்தினரும், மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமிக்கு 18 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பாஜகவுக்கு மக்களிடையே இருந்த ஆதரவில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அது பெரிய அளவிலான சரிவு இல்லை.
ஆண்களை விட பெண்களின் ஆதரவு காங்கிரசுக்கு அதிகம் உள்ளது. பாஜகவை ஆண்கள் அதிகம் ஆதரிக்கின்றனர்.
கர்நாடகத்தில் எத்தகைய அரசு அமையும் என்ற கேள்விக்கு தனி பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜகவுக்கு 75லிருந்து 80 இடங்களும், காங்கிரசுக்கு 50லிருந்து 55 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 20லிருந்து 25 இடங்களும் கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
மேலும் 35 முதல் 40 இடங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே போட்டியும் இழுபறியும் நிலவுகிறது. இந்த இடங்களில் பெரும்பாலானவற்றை வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும்.
இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் டெக்கன் ஹெரால்ட்-சிஎன்என் ஐபிஎன் டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெல்லும் எனக் கூறப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.