சேவை வரி- ஜவுளி உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்
கரூர்: சேவை வரி உள்பட பல மறைமுக வரிகளை நீக்க கோரியும், நூல் விலையை கட்டுப்படுத்த கோரியும் வரும் 16ம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் அவசர கூட்டம் தலைவர் குமார் தலைமையில் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாதல் ஜவுளி வர்த்தகம் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. பல அரசியல் கராணங்களால் நூல் விலை வரலாறு காணாத அளவில் ஏறியுள்ளது.
இதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையாக பாதித்துள்ளன. மறைமுக வரி என சேவை வரியை ஏற்றுமதியாளர்கள் 14 இடங்களில் செலுத்த வேண்டியுள்ளது. வெளிநாட்டு தரகர்களுக்கு சேவை வரி இல்லை என்று அரசு கூறி வந்தாலும் 12.36 சதவீதம் வரை சேவை வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் தொழிலை லாபகரமாக நடத்த முடியவில்லை.
இந்த கோரிக்கைகளை வலியுத்தி கரூரில் வரும் 7ம் தேதி முதல் அனைத்து ஜவுளி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள நிறுவனங்கள் சார்பில் கடையடைப்பு பேராட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாடு ஜவுளி கூட்டமைப்பு சார்பில் வரும் 16ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள ஜவுளி நிறுவனங்கள், அதனை சார்ந்த நிறுவனங்கள், மற்றும் நெசவாளர்கள் ஆகியோர் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கரூர் மாவட்ட நெசவாலைகள் அதிபர்கள் சங்கம் இன்று முதல் 3 நாள் ஸ்ட்ரைக் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.