வாசனை வரவேற்பதில் தகராறு-கோஷ்டி மோதல்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை வரவேற்பதில் அவரது ஆதரவு காங்கிரசாரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஆண்டிமடத்தில் காங்கிரஸ் பிரமுகர் திருமணம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் விருத்தாசலம் வழியாக வந்தார்.
அப்போது விருத்தாசலம் பஸ் நிலையம் முன்பு ஜி.கே.வாசனுக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில் முன்னாள் எம்.பி.வள்ளல்பெருமான், கடலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக்குமார், முன்னாள் எம்எல்ஏ தியாகராஜன் மகன் நீதிராஜன் மற்றும் காங்கிரசார் வரவேற்பு கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து பஸ்நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஜி.கே.வாசன் சென்றார். அவருடன் செல்வதில் காங்கிரசார் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஆண்டிமடத்துக்கு ஜி.கே.வாசன் புறப்பட்டு சென்றதும், தள்ளு, முள்ளு பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.
இந்த கோஷ்டி மோதலில் அசோக்குமாரின் ஆதரவாளரான இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அருள், விருத்தாசலம் வட்டார தலைவர் சிவபெருமாள் ஆகிய இருவரையும் நீதிராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அருளும், சிவபெருமாளும் காயம் அடைந்தனர். அவர்களை மற்ற காங்கிரசார் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த தாக்குதலை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் அசோக்குமார் தனது ஆதரவாளர்களுடன் விருத்தாசலம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்தத போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்டோரை சமாதானம் செய்தனர். இதையடுத்து காங்கிரசார் மறியலை கைவிட்டனர்.