காவிரி டெல்டா வளர்ச்சிக்கு உலக வங்கி ரூ.76.23 கோடி
புதுக்கோட்டை: புதுகை, தஞ்சை டெல்டா பகுதிகளில் ரூ.76.23 கோடி உலக வங்கி நிதியுதவியுடன் நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்வள மேலாண்மை திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் காவிரி ஆற்றுப் படுகையில் வேளாண் வளர்ச்சிக்காக உலக வங்கி நிதியுதவியளித்துள்ளது. இதன்படி ரூ.76.23 கோடி செலவில் நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்வள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புதுக்கோட்டையில் அக்னியாறு படுகையில் 8,476 ஹெக்டேர் நிலத்துக்கு ரூ.51.48 கோடி ரூபாயும் தஞ்சாவூரில் அம்புலியாறு படுகையில் 3,540 ஹெக்டேர் நிலத்துக்கு ரூ.24.75 கோடி ரூபாயும் இந்த திட்டத்துக்காக செலவிடப்படுகிறது.
வேளாண் விளைபொருள் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழக வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கால்வாய் சீரமைப்பு, புதிய தடுப்பணைகள் அமைத்து நீர்ஆதாரத்தை பெருக்குவதோடு விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை உடனடியாக கொள்முதல் செய்வதற்கு பல்வேறு தொழில்நிறுவனங்களுடன் தொடர்பும் ஏற்படுத்தித் தரப்படும்.
விவசாயம், பொதுப்பணி, நீர்வளம், வேளாண் பொறியியல், தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் வர்த்தகம் ஆகிய துறைகள் மற்றும் தமிழக வேளாண் பல்கலைக்கழத்துடன் ஒருங்கிணைந்து இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.