ஸ்ரீசாந்த்துக்கு ஹர்பஜன் கொடுத்த பளார் - பார்த்து அதிர்ந்த நானாவதி!
ஏப்ரல் 25ம் தேதி மொஹாலியில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையிலான மோதலில் மும்பை அணி வென்றது. இதனால் கோபத்தில் இருந்த மும்பை அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணியின் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்து விட்டார்.
இதனால் அதிர்ந்து போன ஸ்ரீசாந்த், தேம்பித் தேம்பி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து விசாரித்த போட்டி நடுவர் பரூக் என்ஜீனியர், ஹர்பஜன் சிங்குக்கு 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளார்.
மேலும், அகமதாபாத்தைச் சேர்ந்த வக்கீல் சுதிர் நானாவதி தலைமையிலான ஒரு நபர் ஆணையரை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது. நானாவதியும் தனது விசாரணையை மேற்கொண்டுள்ளார்.
இன்று அவர் மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரியத் தலைமையகத்தில் இதுதொடர்பான வீடியோவைப் பார்த்தார். அவருடன் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா, இணைச் செயலாளர் பான்டோவ் ஆகியோரும் உடன் இருந்தனர்.
வீடியோ காட்சியைப் பார்த்து விட்டு வந்த நானாவதி செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் என்ன காட்சியை வீடியோவில் பார்த்தேனோ அது எனக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. எனக்கு வேறு எந்த விளக்கமும் தேவைப்படவில்லை. எனது வேலை ஈசியாகி விட்டது. எனது விசாரணைக்கு இந்த வீடியோ மிகவும் உறுதுணையாக இருக்கும்.
திங்கள்கிழமை எனது விசாரணை அறிக்கையை வாரியத் தலைவர் சரத்பவாரிடம் அளிக்கவுள்ளேன் என்றார்.
தனது விசாரணையின் ஒரு கட்டமாக போட்டி நடுவர் பரூக் என்ஜீனியர், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் (ஸ்ரீசாந்த்தை ஹர்பஜன் அறைந்தபோது இவர்தான் பக்கத்தில் இருந்தார்), நடுவர் அமீஷ் சஹேபா (ஸ்ரீசாந்த்தை விமர்சித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்) ஆகியோரின் வாக்குமூலங்களையும் நானாவதி பெற்றுள்ளார்.
இறுதியாக இன்று முக்கிய வீடியோவையும் நானாவதி பார்த்து விட்டார். இத்துடன் இவரது விசாரணை முடிந்துள்ளது. திங்கள்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். அதை கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து, ஹர்பஜன் சிங் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.