லஞ்சப் பட்டியலை வெளியிட்டு ஆர்டிஓ அதிரடி
சேரன்மகாதேவி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மணல் குவாரியில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் பட்டியலை ஆர்டிஓ பகிரங்கமாக வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேரன்மகாதேவி அருகே அரசு மணல் குவாரியில் லஞ்சம் வாங்கிய விஏஓ, தலையாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ள நோட்டு ஒன்று கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து சேரன்மகாதேவி கோட்டாட்சியர் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், சேரன்மகாதேவி அருகேயுள்ள துப்பாக்குடி மற்றும் மலையான்குளத்தில் உள்ள அரசு மணல் குவாரியில் நான் நேரடியாக சென்று சோதனை செய்தேன்.
அப்போது துப்பாக்குடி மணல் குவாரியில் விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படாத மணல் அள்ளுவதற்கு அனுமதி சீட்டுகளில் கடையம் பாசன உதவி பொறியாளர் மாரியப்பன் கையெழுத்திட்ட அரசு முத்திரை பதிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்ட அனுமதி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதுபோல மலையன்குளத்தில் லஞ்சம் கொடுத்த விபரங்கள் அடங்கிய நோட் ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த நோட்டில் யார், யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் வனத்துறை, காவல்துறை, பொதுபணிதுறை சேர்ந்த அதிகாரிகள் பெயர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளன. இதில் லஞ்சம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ள தெற்கு வீரவநல்லூர் தலையாரி வீரபாண்டி, வடக்கு வீரவநல்லுர் தலையாரி பிச்சுகுட்டி மற்றும் தெற்கு வீரவநல்லூர் விஏஓ பரமசிவம் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
மேலும் அனுமதியின்றி மணல் அள்ளிய 17 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது போல இந்த இரண்டு இடங்களிலும் ஒரு யூனிட் மணலுக்கு ரூ.600 மட்டுமே அரசு நிர்ணயித்த தொகை. ஆனால் மேற்கண்ட மணல் குவாரிகளில் 3 யூனிட் மணலுக்கு ரூ.5500ம், 5 யூனிட்டுக்கு ரூ.7500ம், 6 யூனிட்டுக்கு ரூ.9000ம் வசூலித்துள்ளனர்.
இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக ஸ்பெஷல் பிராஞ்ச் சிஐடி போலீசாருக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக இந்த நோட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யார், யார் எவ்வளவு லஞ்சம் வாங்கினர் என்ற பட்டியலும் இதில் உள்ளது. அதன் விவரம்:
பேரூராட்சி தலைவர் ராமையா - ரூ.5 ஆயிரம்
புதூர் செயலாளர் பொன்னையா - ரூ.2 ஆயிரம்
படாபுரம் துரைசாமி - ரூ.1000
செங்குளம் செயலாளர் முத்துகிருஷ்ணன் - ரூ.1000
அழகப்பபுரம் செயலாளர் லட்சுமணன் - ரூ.1000
பா.ம.க பிரமுகர் முருகன் - ரூ.1000
மலையன்குளம் சக்திவேல் - ரூ.1000
வனத்துறைக்கு வாரா, வாரம் ரூ.500 கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 6-2-08 அன்று,
எஸ்பிசிஐடி 'ஏ' என்ற நபருக்கு - ரூ.2000,
எஸ்பிசிஐடி 'பி' க்கு - ரூ.2000
எஸ்பிசிஐடி 'கே' க்கு - ரூ.2000வழங்கப்பட்டுள்ளதாக நோட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் பாலாஜி.
லஞ்சம் வாங்கியவர்களின் பட்டியல் பகிரங்கமாக வெளியிடப்பட்ட தகவல் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.