அக்னி-3 அணு ஏவுகணையை ஏவி இந்தியா சோதனை
3000 கிலோமீட்டர் தொலைவுக்குப் பாயும் சக்தி கொண்ட அக்னி-3 அணுகுண்டை ஏந்திச் செல்லும் திறன் படைத்தது.
ஒரிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து அக்னி-3 ஏவி பரிசோதிக்கப்பட்டது. வீலர் தீவில் உள்ள ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9.56 மணிக்கு அக்னி-3 ஏவப்பட்டது.
16 மீட்டர் நீளமுடைய 1.8 மீட்டர் அகலம் கொண்ட அக்னி-3 ஆரஞ்சு மற்றும் வெண்ணிறப் புகையைக் கக்கியபடி சீறிப் பாய்ந்தது.
அக்னி-3 ஏவுகணையில் கம்ப்யூட்டர் உதவியுடன் இயங்கக் கூடிய வழிகாட்டு அமைப்பு உள்ளது. மேலும் பேட்டரியால் இயங்கக் கூடிய ரேடார்களும், எலக்ட்ரோ ஆப்டிக் டிராக்கிங் அமைப்பும் இதில் உள்ளது.
சோதனையின் முடிவு வெற்றியா, தோல்வியா என்பது விரிவான ஆய்வுக்குப் பின்னரே தெரிய வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அக்னி-3 ஏவுகணை முதன் முதலில் கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி ஏவிப் பரிசோதிக்கப்பட்டது. இருப்பினும் அது தோல்வியில் முடிந்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி 2வது சோதனை நடந்தது. தற்போது 3வது முறையாக ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.