உத்தபுரம்: ஊருக்குள் நுழைய 'உயர் ஜாதியினர்' மறுப்பு!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரத்தில் கடந்த 1989-ம் ஆண்டு இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு சுமார் 40 அடி நீளத்தில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.
அந்த சுவரை இடிக்கக் கோரி தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று அதிரடியாக சுவரின் ஒரு பகுதியை அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்துத் தள்ளினர்.
40 அடி நீள தடுப்பு சுவரில் 15 அடி இடிக்கப்பட்டு அங்கு பொதுப்பாதை அமைக்கப்பட்டது. மேலும் அங்குள்ள 25 அடி நீள தடுப்பு சுவர் சொந்த பட்டா நிலத்தில் கட்டப்பட்டு இருந்ததால் அவை இடிக்கப்படவில்லை. உத்தபுரத்தில் அமைதி நிலவவேண்டும் என்றும் இருதரப்பினரும் சுமூகமாக செல்லவேண்டும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் இடிக்கப்பட்ட தடுப்பு சுவரை மீண்டும் கட்டித்தரவேண்டும் என்று கோரி ஒரு பிரிவினர் ஊரை காலி செய்தனர். அவர்கள் உத்தபுரம் அருகே தாழையூத்து என்னும் இடத்தில் உள்ள மலையில் தஞ்சம் அடைந்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்கேயே தங்கி உணவு சமைத்து சாப்பிட்டனர்.
தடுப்பு சுவர் இடிக்கப்படுவதை முன்கூட்டியே அறிந்த அந்த மக்கள் மலைக்கு சென்று விட்டனர். இரவில் அங்கேயே மரங்களில் தொட்டில் கட்டி தங்களது குழந்தைகளை தூங்க வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், ஊருக்குள் வரமறுத்து அடம் பிடிக்கின்றனர். இடிக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரை மீண்டும் கட்டித் தந்தால் மட்டுமே ஊருக்குள் வருவோம் என்று கூறினர்.
கொளுத்தும் வெயிலிலும் உத்தபுரம் பகுதியினர் மலைமீது தங்கி தங்கள் போராட்டத்தை தொடருவது பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.