For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசைத்தறிகளுக்கு மின்தடை இல்லை - அதிமுக புகாருக்கு வீராசாமி பதில்

By Staff
Google Oneindia Tamil News

Arcot Veerasamy
சென்னை: விசைத்தறிகளுக்கான விநியோகத்தில் மின்தடை செய்யப்படுவதில்லை. காற்றாலை மின்உற்பத்தியால் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கும் 600 மெகாவாட் மின்சாரத்தில் 200 மெகாவாட்டை திருப்பித் தருகிறோம் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

சட்டசபையில் நேற்று தொழில் துறை மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அதிமுக உறுப்பினர் செ.ம.வேலுசாமி பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இந்த அரசு ஏற்கனவே உள்ள பெரிய சிறிய தொழில்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோவை மாவட்டத்தில் பஞ்சாலை, பனியன் ஆலை, மோட்டார் பம்ப், பவுண்டரி, விசைத்தறி தொழில்களில் மின் தட்டுப்பாடு, கச்சா பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உள்பட பல பிரச்சினைகள் நிலவுகின்றன.

பவுண்டரி தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதால் 30 சதவீதம் பேருக்கு வேலை இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இருக்கின்ற தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை கொடுக்காமல், புதிய தொழிற்சாலைகளுக்கு ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தை கொடுத்ததால்தான் இந்த தொழிற்சாலைகளை மூடக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விசைத்தறிகளுக்கு 3 முறை மின் கட்டணத்தை குறைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் எந்த சலுகையும் வழங்கவில்லை. ஆனால் இப்போது மின் தட்டுப்பாடு உள்பட பல்வேறு காரணங்களால் பஞ்சாலை, விசைத்தறி, பவுண்டரி போன்ற தொழில்களில் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகி வருகிறது. எனவே பஞ்சாலை, விசைத்தறி தொழில்களுக்கு மின் கட்டண சலுகை, வரிச் சலுகை வழங்க வேண்டும் என்றார்.

இதற்கு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதிலளிக்கையில், விசைத்தறிகளுக்கு மின் தடை இல்லை. மாற்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டபோதுகூட விசைத்தறி அதிபர்கள் ஒப்புக்கொண்டு, பின்பு அதிலிருந்து தங்களுக்கு விதிவிலக்கு வேண்டும் என்று கேட்டனர். ஆகவே அவர்களுக்கு தடையின்றி தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

கடந்த ஒரு வாரகாலமாக காற்றாலை மூலம் தினமும் ஆயிரம் முதல் 1400 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தியாகிறது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கும் 600 மெகாவாட் மின்சாரத்தில் 200 மெகாவாட்டை தேவையில்லை என்று திருப்பிக் கொடுத்து வருகிறோம். எனவே 'மின்தடை', 'மின்தடை' என்று கூறி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அ.தி.மு.க. கொறடா கே.ஏ.செங்கோட்டையன், விசைத்தறிகளுக்கு வாரத்தில் ஒரு நாள் மின்சாரம் வழங்கக் கூடாது என்று சர்க்குலர் அனுப்பப்பட்டுள்ளது அமைச்சருக்கு தெரியுமா? அதுதவிர பராமரிப்பு என்று கூறி மாதத்தில் 5 நாட்கள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்றார்.

இதையடுத்து ஆற்காடு வீராசாமி, விசைத்தறிகளுக்கு வார நாட்களில் விடுமுறை என்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று பதில் அளித்தார். அப்போது அதிமுக தரப்பில் 'இல்லை' என்று உரக்க குரல் கொடுத்தனர். தொடர்ந்து சில அதிமுக உறுப்பினர்கள் எழுந்து பேச வாய்ப்பு கேட்டனர். இதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X