For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளிர் மசோதா: அரசுக்கு ஆதரவு வாபஸ்-லாலு கட்சி எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Lalu Prasath
டெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முயன்றால் அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறும் முடிவை எடுக்க ராஷ்டிரிய ஜனதாதளம் தயங்காது என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் பெரும் அமளிக்கிடையே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் சட்ட அமைச்சர் பரத்வாஜ் கையிலிருந்து மசோதாவைப் பறிக்க முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக பரத்வாஜ் கூறியிருப்பதற்கு லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற ராஷ்டிரிய ஜனதாதள துணைத் தலைவர் தேவேந்திர பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த மசோதாவில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யப்படாததற்கு கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் முழுமையாக எதிர்ப்பு ெதரிவித்தார்.

ஆனால் ராஷ்டிரிய ஜனதாதளத்தின் ஆலோசனைகளையும், யோசனைகளையும் புறம் தள்ளி விட்டு இந்த மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் கூட்டணி தர்மத்தை அது மீறி விட்டது.

சட்ட மசோதாக்களை தாக்கல் செய்வதாக இருந்தால் 48 மணி நேரத்திற்கு முன்பு அதன் நகலை எம்.பிக்களுக்குத் தர வேண்டும் என்பது நாடாளுமன்ற நடைமுறை. ஆனால் அதையும் மத்திய அரசு மீறியுள்ளது.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது மிகவும் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியத்தின் அடிப்படையை தகர்த்தெறிந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம், மகளிர் மசோதா குறித்து பொது கருத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதியை மீறி விட்டார் பிரதமர்.

தற்போதுள்ள மசோதாவின்படி, 15 சதவீத பெண்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். அவர்களும் கூட உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த பெண்கள்தான். 85 சதவீத பெண்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனவே இந்த அநீதியான மசோதாவை ராஷ்டிரிய ஜனதாதளம் ஏற்காது.

எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்தால், இந்திய- அமெரிக்க அணு ஒப்பந்தத்தை விட மிகப் பெரிய அரசியல் நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்படும். அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

மேலும், அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறும் முடிவு உள்பட எந்த முடிவையும் எடுக்க எங்களது கட்சி தயங்காது என்றும் பிரசாத் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X