ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம்: ஆந்திராவில் 10 பேர் கைது
விஜயவாடா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் நடத்தியதாக ஆந்திராவில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி மற்றும் கொல்கத்தாவில் ஐபிஎல் டுவென்டி20 லீக் போட்டிகள் நடந்தன. ஹாட்ரிக் தோல்வி அடைந்த டோணியின் சென்னை சூப்பர் கிங்ஸ், அதிரடி வீரர் சேவாக்கின் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளின் போட்டி நேற்றும் கடும் விறுவிறுப்பாக இருந்தது.
இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டம் நடப்பதாக குண்டர் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் விஜயவாடா கோவிந்தராஜுலு மீன் மார்க்கெட்டில் போலீஸார் திடீரென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், டிவி ஒளிபரப்பை பார்த்து பணம் கட்டி பந்தயம் நடத்திய 10 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.69,756, 8 செல்போன்கள் மற்றும் டிவி பறிமுதல் செய்யப்பட்டது. கிரிக்கெட் சூதாட்டம் நடத்தியதாக அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.