For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தபுரம்-மலைப் பகுதியில் தங்கியுள்ளவர்களுடன் கலெக்டர் நடத்திய பேச்சு தோல்வி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் தலித் மக்களை ஒதுக்கி வைக்க கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டதைக் கண்டித்து மலையில் குடி புகுந்துள்ள இன்னொரு ஜாதியினருடன் மாவட்ட கலெக்டர் ஜவஹர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

மலையை விட்டு வெளியேற மறுத்துவிட்ட அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட தங்களது குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர்களையும் திருப்பி அனுப்பி விட்டனர்.

உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள இந்த கிராமத்தில் 1989ம் ஆண்டு நடந்த ஜாதிக் கலவரத்திற்குப் பிறகு அங்கு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இதனால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. எங்கு போவதாக இருந்தாலும் சுவரைச் சுற்றி நீண்ட தூரம் பயணிக்க நேரிட்டது.

இதையடுத்து சுவரை இடிக்க வேண்டும் என்று சமீப காலமாக அங்கு போராட்டங்கள் வெடித்தன. மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. சுவரை இடிக்க, அதை எழுப்பியவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து அரசு அதிரடியாக சுவரை இடித்து வழி ஏற்படுத்தியது.

இதைக் கண்டித்து சுவர் எழுப்பிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊரைக் காலி செய்து விட்டு குடும்பத்தினருடன் அருகில் உள்ள தாழையூத்து மலைப் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். அங்குள்ள அடிவாரத்தில் அவர்கள் தங்கியுள்ளனர்.

கடந்த 3 நாட்களாக அவர்கள் அங்கேயே குழந்தைகளுடன் தங்கி இருந்து வருகிறார்கள். வெட்ட வெளியில் சமைத்து சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு சுற்றுப்புற கிராம மக்கள் உணவு பொருட்கள் வழங்கி உதவி வருகின்றனர்.

இந் நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதையடுத்து பிரபாகரன் (8 மாதம்), அனு(4), பிரியா (8), தீபா (2), ரூபா (4), ஐஸ்வர்யா (2), ஜமுனாதேவி (14) ஆகிய 7 குழந்தைகளுக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த மாவட்ட நிர்வாகம் உசிலம்பட்டி மருத்துவத்துறை இணை இயக்குனர் தலைமையில் மற்றும் டாக்டர்கள், செவிலியர்களை மலைப் பகுதிக்கு அனுப்பியது.

ஆனால், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அவர்களது பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் மருத்துவக் குழு திரும்பி வந்துவிட்டது.

இதையடுத்து மதுரை கலெக்டர் எஸ்.எஸ்.ஜவஹர் அந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மலைப் பகுதிக்கு சென்றார். அவருடன் மாவட்ட எஸ்பி அன்பு, உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அப்பாவு, பேரையூர் தாசில்தார் பன்னீர்செல்வம், அதிகாரிகள் மற்றும் ஏராளமான போலீசாரும் சென்றனர்.

மக்களை ஊர் திரும்பும்படி கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், இடித்த சுவரை மீண்டும் கட்டித் தர வேண்டும், மாரியம்மன் கோவில் நிலத்திற்குப் பட்டா தர வேண்டும், 89ம் ஆண்டு ஜாதிக் கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும் என பல நிபந்தனைகளை அவர்கள் விதித்தனர்.

நீங்கள் முதலில் ஊருக்கு திரும்புங்கள், உங்கள் பிரதிநிதிகளை அனுப்புங்கள், பேச்சுவார்த்தை நடத்துவோம் என கலெக்டர் கூறியதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் பேச்சு தோல்விடைந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X