கூலித் தொழிலாளி மகன் சாதனை - டீக்கடைக்காரர் மகள் வேதனை
திண்டுக்கல்: பிளஸ்டூ வேளாண் பயிர் உற்பத்திப் பாடப் பிரிவில் திண்டுக்கல்லைச் ேசர்ந்த கூலித் தொழிலாளியின் மகன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல்லில் உள்ள டட்லி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த செல்வசக்தி. இவரது தந்தை தினக் கூலியாக வேலை பார்த்து வருகிறார். கடும் வறுமைக்கு மத்தியிலும் படிப்பில் கெட்டியாக படித்து வந்தார் செல்வ சக்தி. பிளஸ்டூவில், வேளாண் பயிர் உற்பத்திப் பாடப் பிரிவில் அவர் 200 மதிப்பெண்ளுக்கு 196 பெற்று மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதித்துள்ளார்.
டீக்கடைக்காரர் மகளின் சாதனை + வேதனை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த மாத்தூரைச் சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் மகேஸ்வரி என்பவர் 1016 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். டிவி ரேடியோ மெக்கானிசம் பாடத்தில் மாநில அளவில் 2வது இடமும் கிடைத்துள்ளது.
ஆனால் தொடர்ந்து படிக்க அவரது குடும்ப வறுமை பெரும் தடைக்கல்லாக மாறியுள்ளது.
இவரது தந்தை நாகராஜன். இவர் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையிலிருந்து மாத்தூர் வந்து செட்டிலானவர். இங்கு டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
மகேஸ்வரி அப்பகுதியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
சிறப்பாக படிக்கும் மகேஸ்வரி பிளஸ்டூவில் நல்ல மதிப்பெண்களுடன் தேறியுள்ளபோதிலும், குடும்ப வறுமையால் தான் நினைத்தபடி பி.இ. படிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அரசு தனக்கு நிதியுதவி செய்ய வேண்டும். அப்போதுதான் தன்னால் தொடர்ந்து பி.இ. படிக்க முடியும் என்று ஏக்கத்துடன் கூறுகிறார் மகேஸ்வரி.
--