For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடையை மீறி தொழுகை- தமுமுகவினர் கைது

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் கோட்டை வளாகத்திற்குள் தடையை மீறி தொழுகை நடத்த முயன்ற தமுமுகவினரை போலீஸார் கைது செய்தனர். இதனால் வேலூர் கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூரில் உள்ள புகழ் பெற்ற கோட்டை மற்றும் அதன் வளாகம், மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வளாகத்திற்குள் உள்ள ஒரு மூடப்பட்டுக் கிடக்கும் கட்டடத்தை மசூதி என முஸ்லீம் அமைப்புகள் கூறி வருகின்றன.

இந்த மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்ைக விடுத்து வந்தன.

இந்த நிலையில் இன்று இம்மசூதியில் வெள்ளிக்கிழமைத் தொழுகையை நடத்தப் போவதாக தமுமுக அறிவித்திருந்தது. ஆனால் இதற்கு காவல்துறை தடை விதித்திருந்தது. தடையை மீறி யாராவது உள்ளே நுழைய முயன்றால் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்திருந்தது.

இருப்பினும் திட்டமிட்டபடி மசூதியில் நுழைந்து தொழுகை நடத்தப் போவதாக தமுமுக கூறியிருந்ததால் பரபரப்பு நிலவியது. கோட்டை வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கோட்டைக்குச் செல்லும் வழிகளான மக்கான் சந்திப்பு, பெங்களூர் சாலை, பைபாஸ் ரோடு, கோட்டை சுற்றுச்சுவர், ஆபிஸர்ஸ் லைன் ஆகிய முக்கிய இடங்களில் இன்று காலை 6 மணி முதலே சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்து நிறுத்தப் பட்டது. அந்த வழியாக செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கோட்டை சுவர் மீது துப்பாக்கியுடன் போலீசார் நிறுத்தப்பட்டனர். கோட்டை வாசல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூட்டத்தைக் கலைக்க பயன்படும் "வஜ்ரா' கனங்கள், "வருணா' வாகனங்கள், தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

வடக்கு மண்டல போலீஸ் ஐஜி ராதாகிருஷ்ணன், வேலூர் சரக டிஐஜி சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் வேலூர் சூப்பிரண்டு அறிவுச் செல்வன், காஞ்சிபுரம் சூப்பிரண்டு பெரியய்யா, திருவண்ணாமலை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வேலூர் கூடுதல் சூப்பிரண்டு ராமதாஸ் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னின்று கவனித்தனர்.

இந்த நிலையில் டோல்கேட் பகுதியில் உள்ள பங்ஷன் பேலஸ் என்ற திருமண மண்டபத்தில் இன்று காலை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் குவிந்தனர். தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் அவர்கள் வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டனர்.

பைபாஸ் சாலை வந்ததும் அவர்கள் அனைவரும் கோட்டையை நோக்கி நடக்க முற்பட்டனர். ஆனால், கோட்டையை நெருங்க முடியாதபடி தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. போலீசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் காணப்பட்டது. கோட்டைக்குள் செல்ல முடியாமல் போனதால் ஆபிஸர்ஸ் லைன் பகுதியில் முஸ்லீம்கள் அனைவரும் சாலையில் பாய் விரித்து பகல் 12.30 மணி முதல் 12.45 மணி வரை கால் மணி நேரம் தொழுகை நடத்தினர்.

அந்த சமயத்தில், தமுமுகவினரில் ஒரு பகுதியினர் தடையை மீறி கோட்டைக்குள் செல்ல முயன்றதால் அவர்கள் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X