தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!
சிட்னி: தினசரி சராசரியாக 2 பெக் மதுபானம் அருந்துபவர்களுக்கு மார்பக, குடல், தொண்டை மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சௌத்வேல்ஸ் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், தினசரி 2 பெக் மதுபானம் சாப்பிடுபவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 75 சதவீத வாய்ப்பும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட 22 சதவீத வாய்ப்பும் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வு பற்றி புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் ஜிம் பிஷப் கூறுகையில், இந்த ஆய்வு மூலம் மக்களிடம் பீதியை கிளப்ப விரும்பவில்லை. ஆனால் சராசரியாக தினமும் ஒருவர் மதுபானம் அருந்தும் அளவைப் பொறுத்து அவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்பது உண்மை.
குடிப்பதால் பெரிய ஊறு ஏற்படும் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பெக்குக்கு 10 முதல் 20 சதவீத அபாயம் அதிகரிக்கும். ஆனால் தினமும் 2 பெக் அளவுக்கு குடித்துவந்தால் அதுதான் உயிருக்கு ஊறு விளைவிக்கும்.
இதுபற்றி ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை துணை அமைச்சர் வெரிட்டி ஃபிர்த் கூறுகையில், அளவுக்கதிகமான குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் மிதமான குடிப்பழக்கம்கூட ஆபத்தை உண்டாக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது என்றார்.