பிஇ புதிய கட்டணம் விரைவில் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்விக்கு புதிய கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி பாலசுப்பிரமணியன் கமி்ட்டி பரிந்துரை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது.
பொறியியல் கல்விக்கட்டணத்தை புதிதாக நிர்ணயிப்பதற்காக நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டியை தமிழக அரசு நியமித்தது. இந்த கமிட்டி ஆலோசனை கூட்டங்கள் பல கட்டங்களில் நடந்தன. சென்னையில் நேற்றும் இந்த கமிட்டியின் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன், உயர்கல்வித்துறை செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜேப்பியார், பேராசிரியர் கனகராஜ், முத்துராமலிங்கம் உள்பட 40க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். கல்விக்கட்டண நிர்ணயம் குறித்து அவர்களிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. பொறியியல் கல்லூரிகளில் வருடத்துக்கு ஒரு மாணவருக்கு கல்லூரி தரப்பில் எவ்வளவு செலவாகிறது? என்பது உள்ளிட்ட விவரங்கள் கேட்டறியப்பட்டன.
இந்தாண்டு பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகி பிஇ படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் புதிய கட்டணத்தை நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி விரைவில் அரசுக்கு பரிந்துரை செய்யும் என்று கூறப்படுகிறது.