சேது கால்வாய்: உச்சநீதிமன்ற யோசனையை மத்திய அரசு பரிசீலிக்கும்- பாலு
ரூ.2,400 கோடி செலவிலான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்தும்போது, ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் மாற்றுவழியில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு சென்னை உயர்நீதிமன்றம் கூறிய யோசனையை உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் அமைச்சர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இதை ஒரு யோசனையாகத்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரவாக சொல்லவில்லை. மாற்றுவழி குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளின் முழு விவரமும் மத்திய அரசுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
அந்த விவரங்கள் கிடைத்தவுடனே அது பற்றி நன்கு ஆய்ந்து மேற்கொண்டு நடவடிக்கை எடு்க்கப்படும் என்றார் பாலு.
முன்னதாக, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரி்த்தது.
விசாரணையில், மாற்று வழி குறித்து மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்ததோடு, 25 கி.மீ. நீளமுள்ள 'ஆதாம் பாலம்' என்றும் அழைக்கப்படும் ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட புராதன சின்னமா என்பதை உறுதி செய்வதற்கு மத்திய தொல்லியல் துறையினர் ஏதாவது விஞ்ஞானபூர்வ ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்களா என்ற விவரத்தையும் மத்திய அரசு தெரிவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.