பிளஸ்டூ பெயில்-3 மாணவிகள், 2 மாணவர்கள் தற்கொலை
சென்னை: பிளஸ்டூ தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து 3 மாணவிகள், 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் விரக்தியில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 3 மாணவிகள், மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
பெரியபாளையம் அருகே காடாநல்லூர் கிராமத்தை சேர்ந்த தீனதயாளன் மகன் கௌதமன்(18), சோழவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்தார். பொதுத்தேர்வில் 2 பாடத்தில் தோல்வியடைந்தார். இதனால் மனமுடைந்த கௌதமன் வீட்டு சமையலறையில் இருந்த கெரசினை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடல் கருகிய நிலையில் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருவண்ணாமலை வாசுதேவன் பட்டு கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் மகன் சக்திவேல்(16). பிளஸ்டூவில் அக்கௌன்டன்சி பாடத்தில் தோல்வி அடைந்தார்.
இந்த விரக்தியில் அவர் பூச்சி மருந்தை அருந்தி இறந்தார்.திருவாரூர் மருதப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த காந்தியின் மகள் பாக்யா(16). அரசுப்பள்ளியில் பிளஸ்டூ படித்த இவர் பெயிலானார்.
தோழி வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர் திருவாரூர் தியாகராய கோயில் குளத்தில் குதித்துவிட்டார். இதைப் பார்த்து சிலர் அவரைக் காப்பற்ற முயன்றபோதும் பாக்யா குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
திருப்பூர் காந்திநகரை சேர்ந்த ரங்கசாமியின் மகள் ரூபினி(18). நகராட்சி பள்ளியில் பிளஸ்டூ படித்தார். கணக்கு பாடத்தில் 48 மதிப்பெண்கள் எடுத்து பெயிலான வருத்தத்தில் நேற்று நள்ளிரவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஊட்டியை சேர்ந்த மாணவி கீதா. பிளஸ்டூ தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தார்.
ஒரே நாளில் 5 பேர் இறந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.