பிஇ விண்ணப்ப வினியோகம் தொடங்கியது-19ல் பிவிஎஸ்சி
சென்னை: பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரிகள் பிஇ பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை வினியோகிக்கத் தொடங்கிவிட்டன.
தமிழகம் முழுவதும் பிளஸ்டூ முடிவுகள் வெளியான நிலையில் தனியார் கல்லூரிகளில் பிஇ படிப்புக்கான விண்ணப்பங்கள் நேற்றே தொடங்கிவிட்டது.
அரசு மற்றும் சுய நிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் கொடுக்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம், அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக்குகளிலும் இந்த விண்ணப்பங்கள் கிடைக்கிறது.
தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மகிழ்ச்சியுடன் விண்ணப்பங்களை பெற்று செல்கின்றனர். பிஇ தகுதி மதிப்பெண் இந்த ஆண்டுமுதல் குறைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பொறியியல் கல்லூரிகளில் குவிகின்றனர்.
19 முதல் பி.வி.எஸ்.சி விண்ணப்பங்கள்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் மே 19ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 30ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணைய தளத்தில் அறியலாம்.