சேது மாற்றுவழி யோசனை: பாஜகவுக்கு வெற்றி-இல.கணேசன்
வாசுதேவநல்லூர்: ராமர் பாலத்தை இடிக்காமல் சேதுகால்வாய் திட்டத்துக்கு மாற்றுவழி ஆராயுமாறு உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பாஜக எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று இல.கணேசன் கூறினார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் இல.கணேசன் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற பாஜகதான் பாடுபட்டது. மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் துறையின் கீழ் சேதுசமுத்திர திட்டம் வந்தது
நாங்கள் சேது சமுத்திர திட்டத்தின் மாற்று பாதை குறித்தும் பாதிப்பில்லாத முறையிலும் அமைத்திட வலியுறுத்தினோம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தை நாடி வெற்றி பெற்றுள்ளோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற கொலைகள் 1,362. இந்த ஆண்டு 1,023 கொலைகள். இதில் அரசியல் ஆதாயத்துக்காக 6 கொலைகள் நடந்துள்ளன.
முந்தைய ஆட்சியில் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இந்த ஆட்சியில் உத்தரவு வரும்வரை அதிகாரிகள்காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஓனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தைத் தடுக்க கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிகளுக்கு உரி்மை இல்லை. தற்காலிகமாக திட்டம் நிறுத்தப்பட்டதற்கு முதல்வர் கருணாநிதிதான் காரணம். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு சாதகமாக முடிவுகள் இருக்குமென பேசப்படுகிறது. ஆனால் பாஜகதான் அங்கு ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.