நாட்டின் முதல் ஹீலியம் ஆலை நாகையில் திறப்பு
நாகை: நாட்டிலேயே முதல் ஹீலியம் தொழிற்சாலை நாகப்பட்டிணத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உள்நாட்டிலேயே ஹீலியம் உற்பத்தி செய்யும் நிலை உருவாகியுள்ளது.
நாகை மாவட்டம் குத்தாலம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இயற்கை எரிவாயுவில் இருந்து ஹீலியம் கண்டறியப்பட்டுள்ளது. அதன் உற்பத்தி தொடக்க விழா நேற்று நடந்தது.
ஓ.என்.ஜி.சி.யின் தலைவர் சர்மா திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: ரூ.6 கோடி மதிப்பில் ஹீலியம் வாயு கண்டுபிடிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் மேற்கொண்ட ஆய்வில் 0.05 சதவீதம் ஹீலியம் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது. இது நாட்டிலேயே அதிகமாக கிடைத்துள்ள ஹீலியமாகும்.
ஹீலியம் வாயு ராக்கெட், செயற்கைகோள், க்ரையோஜெனிக் இன்ஜின்களுக்கு தேவையான எரிவாயுவாகும். தொழில்நுட்ப ரீதியாக இந்த வாயுவை உற்பத்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். தற்போது 100 சதவீதம் ஹீலியம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இனி உள்நாட்டிலேயே ஹீலியம் உற்பத்தி செய்யும் நிலை உருவாகியுள்ளது.
குத்தாலத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக மையத்தில் ஹீலியம் பிரித்தெடுக்க முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டம் தொழில்நுட்ப புரட்சியாகும். இந்தியாவில் முதல் முறையாக ஒஎன்ஜிசி நிறுவனம், சாஹா இன்ஸ்ட்யூட் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்துடன் இணைந்து ஹீலியம் வாயுவை கண்டுபிடிப்பதில் இறங்கியுள்ளது. அதிகளவில் ஹீலியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
வணிக ரீதியில் 0.3 சதவீதம் இருக்க வேண்டும் என்றாலும் நமக்கு கிடைத்துள்ள ஹீலியம் குறைவுதான். என்றாலும் வணிக ரீதியாகவும் இதை தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இந்தியாவில் ஹீலியம் உற்பத்தி என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஒரு மைல்கல் என்றார்.