2 ஆண்டு ஆட்சி: திமுக அரசு தேர்வு பெறவில்லை- ராமதாஸ்
திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் அரசு செயல்பாடுகள் குறித்து ராமதாசின் கருத்தை செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு அவர், தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியில் 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த அரசு வழங்கியிருக்கவேண்டும். இது குறித்து கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க தமிழக அரசு முன்வரவேண்டும்.
கள்ளத்தனமாக லாட்டரி விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்திருக்க வேண்டும். ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சில்லறை விற்பனை மையங்களில் காய்கறிகளை விற்கத் தொடங்கியிருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விற்பனைக்கு தடை விதிக்கவேண்டும் என்றார்.
திமுக அரசு செயல்பாட்டுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் அளிக்கலாம் என்று கேட்டதற்கு முதலில் கருத்து கூறாமல், கருணாநிதி அரசு பற்றி உங்கள் (பத்திரிகை ஊடகங்கள்) மூலம் அடிக்கடி எனது கருத்தை சொல்லிக் கொண்டுதானே இருக்கிறேன் என்றார். ஆனால் செய்தியாளர்கள் விடாப்பிடியாக மீண்டும், மதிப்பெண் அளிப்பது பற்றி கேட்டதற்கு,
திமுக அரசின் செயல்பாடுகள் படுதோல்வி அடைந்துவிட்டது. 'தேர்வுபெறவில்லை' என்றார்.