பூங்கோதை-ஏடிஜிபி போன் ஒட்டுக்கேட்பு: சு.சாமி சிடி வெளியீடு
சென்னை: லஞ்ச வழக்கில் உறவினரை காப்பாற்ற ஏடிஜிபியுடன் அமைச்சர் பூங்கோதை சிபாரிசு செய்து பேசியதாக ஆதாரத்துடன் சிடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சுப்ரிமணிய சாமி.
ஏடிஜிபி உபாத்யாயாவுடன் முதல்வரின் செயலர் பேசியது ஒட்டுக் கேட்பதாக எழுந்த புகார் குறித்து சண்முகம் கமிஷன் நாளை விசாரணை நடத்துகிறது. இந்நிலையில் ஏடிஜிபி உபாத்யாயாவுடன் அமைச்சர் பூங்கோதை பேசியதாக சிடி ஆதாரத்தை காண்பித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி.
அவர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியிதாவது: தனது உறவினராக மின் வாரிய துணை இன்ஜினியர் ஜவஹர் என்பவர் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளதாகவும் அவரை காப்பாற்ற உதவுமாறு லஞ்ச ஒழிப்பு ஏடிஜிபி உபாத்யாயாவிடம் சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை பேசியுள்ளார் என்றார். அதற்கு ஆதாரமாக சிடியில் பதிவான உரையாடலை காண்பித்தார். அதில்,
அமைச்சர் பூங்கோதை: ஜவஹர் ஒரு துரதிர்ஷ்டசாலி. அவர் குடும்பம் அவர் வருமானத்தை நம்பிதான் உள்ளது. அவர் என் அப்பாவின் சொந்த அக்கா மகன். இந்த வழக்கில் அவர் மீது கடும் நடவடிக்கை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். வழக்கை மின்வாரியத்துக்கு மாற்றிவிடுங்கள். பிறகு அவர்கள் கவனித்து கொள்வார்கள்.
ஏடிஜிபி உபாத்யாயா: வழக்கை நீதி விசாரணைக்கு கொண்டு செல்வது பற்றி மின்வாரிய தலைமை இன்ஜினியர்தான் முடிவு செய்வார். அவர் அனுமதிக்காவிட்டால், மின்துறை நடவடிக்கை எடுக்கும். இதற்கான கோப்பு மின்துறைக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அந்த உரையாடல் இருந்தது. இதுகுறித்து சுப்ரமணிய சாமி மேலும் கூறுகையில், இந்த சிடி ஆதாரத்தை கவர்னர் சுர்ஜித் பர்னாலாவிடம் அளித்துள்ளேன். நடத்தை விதிமுறைகளை மீறிய பூங்கோதையை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரியுள்ளேன் என்றார்.