உத்தபுரம்: போராடும் மக்களுக்கு ஆதரவாக இன்று கடையடைப்பு
மதுரை: உத்தபுரம் பிரச்னையைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் தற்போது மலையில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கல்லுப்பட்டி, ஏழுமலை, பேரையூர் பகுதிகளில் இன்று கடையடைப்பு நடக்கிறது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தபுரம் கிராமத்தில் சர்ச்சைக்குரிய சுவர் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சமூகத்தினர் அருகில் உள்ள மலையில் குடியேறி நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். இது அதிகாரிகளுக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மலையில் உள்ள மக்களை அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் சந்தித்து சமாதன பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகளுடன் மலையில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண கோரி 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மலையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மலையேறிய மக்களுக்கு ஆதரவாக கல்லுப்பட்டி, ஏழுமலை, பேரையூர் பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஒரு பிரிவு மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது அதிகாரிகளுக்கு மேலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.