பார்லி தாக்கு: குற்றவாளி ஷௌகத் தண்டனை கோர்ட் உறுதி
கடந்த 2001 டிசம்பர் 13ம் தேதி பார்லிமென்ட் வளாகத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் பலர் உயிரழந்தனர். இந்த வழக்கில் குற்றவாளி ஷௌகத் உசேன் குருவுக்கு டெல்லி நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்தது.
இந்த தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து ஷௌகத் தொடர்ந்த வழக்கை கடந்த 2005 ஆகஸ்ட் 4ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்து அவரது தண்டனையை 10 ஆண்டுகளாக குறைத்தது.இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் ஷௌகத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 123 (சதியை மறைத்தல்) படி உச்சநீதிமன்றம் தனது தண்டனையை 10 ஆண்டுகளாக விதித்தது என்றும் தன் மீதான குற்றச்சாட்டில் இந்த பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பதால் தன்னை விடுவிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.பி.நோலேக்கர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது நீதிபதி நோலேக்கர் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் குறிப்பிடும் கருத்தை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பரிசீலித்து தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில் மேற்கொண்டு புதிதாக விசாரிக்க ஒன்றுமில்லை. எனவே மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஷௌகத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.