ஜெய்ப்பூர் தாக்குதல்: அண்டை நாட்டுக்கு தொடர்பு-மத்திய அரசு
டெல்லி: ஜெய்ப்பூரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் அண்டை நாட்டின் தொடர்பு உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் குற்றம்சாட்டியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உள்நாட்டு கலவரத்தால் தவித்து வரும் வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் அல்லது மியான்மர் ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு ஜெய்ப்பூர் சம்பவத்தில் தொடர்பு இருக்கும். இந்த சம்பவத்துக்கு பொறுப்பானது என்று சந்தேகிக்கப்படும் அமைப்பின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை.
ஆனால் அந்த அமைப்பு எது என்பது விரைவில் அம்பலத்துக்கு வரும். வாராணாசி, பைசாபாத், ஆஜ்மீர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்கும் தொடர்பு உள்ளது. இந்த தாக்குதல்கள் எல்லாவற்றிலுமே ஹர்கத் உல் ஜிகாதி இஸ்லாமிய அமைப்பின் மீது சந்தேகம் உள்ளது.
வகுப்பு ஒற்றுமையை சீர்குலைப்பது என்பதே இந்த குண்டுவெடிப்பின் நோக்கமாகும். ஆனால் தீவிரவாதிகளின் இந்த நோக்கம் இதுவரை ஈடேறியது இல்லை. மாறாக வகுப்பு நல்லிணக்கம் வலுபெற்று வருகிறது. தீவிரவாதிகளின் குரூர சதித்திட்டத்துக்கு மக்கள் இரையானதில்லை.
குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் என்ன என்பதை தேசிய அதிரடிப் படையினர் விரைவில் கண்டுபிடிப்பார்கள். ராஜஸ்தான் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு படை வைத்திருந்தாலும் அதை குறித்த தருணத்தில் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அவை இருந்தும் பயனில்லை என்றார்.