பொடா அமல்படுத்தும் திட்டமில்லை- மன்மோகன்
ஜெய்ப்பூரில் நேற்று முன் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 80 பேர் பலியாயினர். சம்பவ இடத்தை பார்வையிட்ட பாஜ மூத்த தலைவர் அத்வானி கூறுகையில், தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய அரசு பொறுப்பற்ற வகையிலும், மெத்தனமாகவும் செயல்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கொள்கைகள் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. ஓட்டு வங்கிக்காக பொடா சட்டத்தை இந்த அரசு ரத்து செய்தது.
4 ஆண்டுகளாக இந்த அரசு ஆட்சியில் இருந்ததே தவிர, மகிழ்ச்சியற்ற பதிவுகளைதான் இந்த அரசு செய்துள்ளது.
நாட்டில் பல மாநிலங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்து வருகிறது. இதை தடுக்க பொடா போன்ற கடுமையான சட்டங்கள் அவசியம். எனவே பொடா சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் பல இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்று கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும்வகையில் பிரதமர் மன்மோகன் கூறியதாவது:
பொடா சட்டம் எதை சாதித்து விட்டது? தீவிரவாதத்துக்கு கருணை காட்டும் எந்த சட்டமும் இந்த நாட்டில் இல்லை.
பொடா சட்டத்தின் மூலம் எந்த குண்டு வெடிப்பையும் தடுக்க முடியாது. பொடா சட்டம் அமலில் இருந்தபோதுதான் நாடாளுமன்றத்திலும், அகமதாபாத்தில் உள்ள அக்ஷர்தாம் கோயிலிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
தற்போதைக்கு பொடா சட்டம் அமல் குறித்து எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.
தீவிரவாத பிரச்னை குறித்து பாகிஸ்தானுடனான வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் கருத்து தெரியப்படுத்தப்படும். இருதரப்பு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் அப்போது விவாதிக்கப்படும். என்று கூறினார்.