போன் பேச்சு: பூங்கோதை வேதனை-முதல்வர் வெட்கம்
சென்னை: அமைச்சர் அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் எனக்கில்லை. ஆனால் பரிந்துரைத்தது தவறு என்று இப்போது உணர்கிறேன் என்று தனது ராஜிநாமா கடிதத்தில் பூங்கோதை தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி உபாத்யாயாவுடன் அமைச்சர் பூங்கோதை பேசிய விவகாரம் சட்டசபையில் நேற்று எழுப்பப்பட்டது. இதையடுத்து அமைச்சர் பூங்கோதை தனது ராஜிநாமா கடிதத்தை முதல்வரிடம் அளித்தார். இதுபற்றி விசாரித்து முடிவெடுக்கப்படும் என்றும் கருணாநிதி தெரிவித்தார்.
முதல்வர் வெட்கம்:
இதுகுறித்து முதல்வர் கூறுகையில், லஞ்சம் வாங்கிய தனது உறவினரை பாதுகாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவரே ஈடுபட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்காக நான் வெட்கப்படுகிறேன் என்றார்
பூங்கோதை வேதனை:
பூங்கோதை தனது ராஜிநாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனது உறவினர் ஜவஹர் மீது நடைபெற்று வரும் விசாரணையின் போக்கில் குறுக்கிட்டு அமைச்சர் என்ற முறையில் என் செல்வாக்கை, அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் இல்லை.
லஞ்ச ஒழிப்பு ஆணையருடன் பேசும்போது ஜவஹர் தொடர்பான விஷயத்தை ஒரு கோரிக்கை என்ற முறையில் பரிசீலிக்கச் சொன்னேன். ஆனாலும் அது தவறு என்று இப்போது உணர்கிறேன். அதற்கு பரிகாரமாக எனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறேன் என்று எழுதியுள்ளார் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
மேலும், ராஜினாமா குறித்து நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதை பற்றி கலந்தாலோசித்து கொண்டிருக்கிறேன். இந்த ஒட்டுக்கேட்பு விவகாரம் எப்படி நடைபெறுகிறது என்று நமது புலனாய்வு அமைப்பு மூலம் ஆராய வேண்டியிருக்கிறது.
இது தொடர்பாக விசாரிக்கு விசாரணை குழு அமைப்பதா அல்லது ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவில் சேர்ப்பதா என்பது குறித்து யோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர்.
சு.சுவாமி பாராட்டு:
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் நடத்திய போன் உரையாடலை ஒப்புக் கொண்டு, அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த பூங்கோதையின் தைரியத்தை பாராட்டுவதாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும், பூங்கோதையை முன்மாதிரியாக கொண்டு மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, லஞ்ச வழக்கில் உறவினரை காப்பாற்ற ஏடிஜிபியுடன் அமைச்சர் பூங்கோதை சிபாரிசு செய்து பேசியதாக ஆதாரத்துடன் சிடி வெளியிட்டு ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சட்டசபையில் பேசிய எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தனது நெருங்கிய உறவினர் ஜவஹர் என்பவரை காப்பாற்றுவதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் உபாத்யாயாவிடம் போனில் சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை பேசியிருப்பது வெளியாகியுள்ளது. இது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியல் சாசன்ப்படி நடப்பேன் என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். இதற்கான பரிகாரத்தை அமைச்சரே காண வேண்டும் என்றார்.