For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தரம் குறைந்த தடுப்பூசி-மத்திய அரசு மீது தமிழகம் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு வழங்கிய தடுப்பூசி மருந்து செலுத்தும் சிரஞ்ச்கள் தரமற்றதாக இருப்பதால் அவற்றை உபயோகிக்க வேண்டாம் என்று நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மருந்து பரிசோதனை முடிவு அறிக்கையில், தடுப்பூசி மருந்தில் குறையில்லை என்று கூறப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணிக்கு அமைச்சர் பன்னீர் செல்வம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதனால் தடுப்பூசியால் தடுக்கப்படும் நோய்களின் பாதிப்பு தமிழகத்தில் வெகுவாக குறைந்துள்ளது. இங்கு போலியோ நோய் பாதிப்பு இல்லை. தடுப்பூசி சேவையில் 100 சதவீத சாதனையை மாநிலம் எட்டியுள்ளது.

மத்திய அரசிடம் இருந்து தரமான தடுப்பு மருந்துகள் வரப்பெற்றதால்தான் இந்த சாதனையை அடைய முடிந்தது. மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்துக்கு வழங்கிய செயலிழக்கும் ஊசிக் குழல்களில் (Auto dissable syringe) சில தரமற்றதாகவும் சில ஊசிகளில் துருவும், குழல்களின் உள்ளே தூசியும் காணப்பட்டன.

அவை தடுப்பூசி போட சிறிதும் தகுதியற்றதாக உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு கடந்த 9ம் தேதி மத்திய சுகாதார துறைக்கு இந்த ஊசிக் குழல் மாதிரிகளோடு அறிக்கை அனுப்பியது. சமீபத்தில் 4 குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசி போட்டவுடன் இறந்துவிட்டதால், தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்துவதில் சில மாற்றங்களை அரசு செய்துள்ளது.

தற்போது தடுப்பூசி திட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சில தேர்வு செய்யப்பட்ட கிராமங்களிலும் டாக்டர்கள் மேற்பார்வையில் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் தரமற்ற ஊசிக் குழல்களை பயன்படுத்தினால் தடுப்பூசித் திட்டம் பாதிக்கப்பட்டு எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.

இதனால் இந்த ஊசிக்குழல்களை பயன்படுத்துவது மாநிலத்தில் முழுவதுமாக உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தரமான ஊசிக்குழல்களை உடனடியாக அனுப்ப வேண்டும். இந்த ஊசிக்குழல்களே எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதால் அவற்றின் தரத்தை உறுதி செய்த பின் பயன்படுத்துமாறு எல்லா மாநில அரசுகளுக்கும் உடனடியாக நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.

தடுப்பூசியில் தவறில்லை-மத்திய அரசு

தமிழகத்தில் குழந்தைகளுக்கு போடப்பட்ட தட்டம்மை தடுப்பூசியில் எந்த தவறும் இல்லை. பாதுகாப்பானதே என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பரிதாபமாக பலியாயின. ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த இந்த மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த மருந்து பரிசோதனைக்காக இமாச்சல பிரதேசத்தில் உள்ள மத்திய மருந்து பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனை முடிவு அறிக்கை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில், தட்டம்மை தடுப்பு மருந்தில் எந்த தவறும் இல்லை. இந்த மருந்து பயன்படுத்துவதற்கு முற்றிலும் பாதுகாப்பானது. ஊசிப் போடும்போது ஏற்பட்ட மனித தவறுகளால் குழந்தைகள் பலியாகியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த அறிக்கை அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக குடும்ப நலத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X