பாஸ்ட் டிராக் கிரீன்கார்டு வழங்க யுஎஸ் மசோதா தாக்கல்
அமெரிக்க பல்கலைகழகங்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளிவில் படிக்கின்றனர். குறி்ப்பாக, இந்தியர்கள் மற்றும் சீனர்கள். இவர்களுக்கு அமெரிக்காவில் உடனடியாக நல்ல வேலை கிடைத்துவிடுகிறது. இதில் பலர் அங்கேயே செட்டில் ஆகிவிட விரும்புகின்றனர். இதற்கு யுஎஸ் கிரீன் கார்டு பெற்றிருக்க வேண்டும்.
கிரீன்கார்டு வழங்கக்கோரி விண்ணப்பித்து ஏராளமான இந்தியர்கள், சீனர்கள் உள்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாகவும் காத்திருக்கின்றனர். அமெரிக்க நாட்டு கிரீன் கார்டு வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தவேண்டும் என நீண்டநாட்களாக பல்வேறு நாடுகளில் இருந்தும் கோரிக்கைகள் வந்தவண்ணம் இருந்தன.
இந்நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் மற்றும் இனிஜினியரிங் ஆகிய துறைகளில் எம்எஸ்சி அல்லது பிஎச்டி பட்டம் பெறும் மாணவர்களுக்கு எளிய முறையில் பாஸ்ட் டிராக் கிரீன் கார்டு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சோ லோப்கிரென் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மசோதாவுக்கு ஜனநாயக கட்சி மற்றும குடியரசு கட்சி உறுப்பினர்களின் பெரும்பாலான ஆதரவு இருப்பதால் விரைவில் சட்டமாகும் என்று தெரிகிறது. அப்படி நிறைவேறினால் பெரும்பான்மையாக இந்தியர்களும், சீனர்களும் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சோ லோப்கிரென் கூறுகையில், இந்த சட்டத்தின் மூலம் அமெரிக்காவில் வந்து படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் முக்கியமாக இந்தியா மற்றும் சீன மாணவர்களின் திறமைகளை இங்கு தக்க வைத்துக் கொள்ள முடியும். இதனால் அமெரிக்க பொருளாதாரம் உலக சந்தையில் தொடர்ந்து சிறப்பாக போட்டியிட முடியும் என்றார்.
மேலும் அமெரிக்க பல்கலைக்கழக குறிப்பிட்ட பாடங்களில் முதுநிலை அல்லது பிஎச்டி பட்டம் பெற்றதோடு அங்குள்ள நிறுவனங்களில் உயர்ந்த பணி நியமன உத்தரவு இருந்தால் போதும் எளிதாக பாஸ்ட் டிராக் கிரீன் வழங்கப்பட்டுவிடும் என்று சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2000ம் ஆண்டு அமெரிக்க நிறுவனங்களில் 75 சதவீத வெளிநாட்டு இன்ஜினியர்கள் வேலை செய்தனர். க்ரீன்கார்டு பெறுவதில் ஏற்படும் சிரமங்களால் அது 63 சதவீதமாக குறைந்தது. இந்த மசோதா அமலுக்கு வந்தால் இது மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.