சூறைக் காற்றில் ரயில் நிலைய ஷெல்டர் நாசம்
மதுரை: மதுரையில் திடீரென்று சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையினால் ரயில்வே நிலையத்தின் 4வது பிளாட்பார மேற்கூரை சின்னாபின்னமானது.
மதுரை ரயில்நிலையம், விமானநிலையம், எஸ்எஸ்காலனி, கூடல்நகர், ஆனையூர் மற்றும் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால் ரோட்டில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த சூறைக்காற்றும் வீசியது.
மதுரை ரயில்நிலைத்தில் பயணிகள் வசதிக்காக 4வது மற்றும் 5வது நடைமேடைக்கு மத்தியில் போடப்பட்டிருந்த பிரமாண்டமான ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையும் இந்த சூறைக்காற்றில் சிக்கி சின்னாபின்னமானது.
300 அடி நீளமுள்ள இந்த நடைமேடை மேற்கூரை பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது ரயில் எதுவும் வராத நேரம் என்பதால் பயணிகள் யாரும் அங்கு இல்லை.
இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
வலுவானதாக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை காற்றுக்கு சரிந்து விழுந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.