புதுக் கட்சியா? விரைவில் முடிவு: கார்த்திக்
கோவை: பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நடிகர் கார்த்திக், சில காலத்திற்கு தான் அரசியலிலிருந்து விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து இன்று நடிகர் கார்த்திக் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதுகுறித்து கோவையில் இன்று நடிகர் கார்த்திக் கருத்து தெரிவிக்கையில், கட்சியின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்கள் சிலர் கூடி என்னை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். ஆனால் கட்சித் தொண்டர்கள் என் பக்கம்தான் உள்ளனர்.
நாம் உடனடியாக புதுக் கட்சி தொடங்க வேண்டும் என்று அனைவரும் என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு சிறிது அவகாசம் தேவை, யோசிக்க வேண்டும். எனவே தற்காலிகமாக நான் அரசியலிலிருந்து விலகி இருக்கப் போகிறேன்.
தொண்டர்களின் விருப்பத்தை நான் மதிப்பவன். எனவே தொண்டர்களின் புதுக் கட்சி கோரிக்கை குறித்து நிச்சயம் பரிசீலிப்பேன். ஆனால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார் கார்த்திக்.
முன்னதாக மதுரையில், நேற்று கார்த்திக் தலைமையில் போட்டிக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய கார்த்திக், நமது தலைமையில் உள்ள பார்வர்டு பிளாக் கட்சி தான் உண்மையான கட்சி. கட்சியில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது.
இந்த இயக்கத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து செயல்பட்டு வருகிறோம். பிரிந்தவர்களை எல்லாம் ஒன்றாக சேர்க்க வேண்டும் என நினைத்தோம் அது தவறா?
கார்திக்கை பார்வர்டு பிளாக்கில் இருந்து பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் அது தவறு. அதற்கான விலையை அவர்கள் தந்தாக வேண்டும்.
எனக்குப் பதவி பெரிதல்ல, அது சாதாரணமானது. அதை தூக்கி எறிவேன். ஆண்டித்தேவரும், கதிரவனும் இப்போது அவர்கள் பக்கம் சேர்ந்துள்ளனர். அதனால்தான் இப்படிப் பேசுகின்றனர்.
கார்த்திக்கை நீக்கி விட்டு கட்சியை நடத்தலாம் என நினைத்தால் அவர்களை நமது மக்கள் தமிழகத்தை விட்டே வெளியேற்றுவார்கள்.
நான் கெட்டவன் என்று அவர்கள் கூறினால் நமது இன மக்கள் பொங்கி எழுவார்கள். மத்தியக் கமிட்டியாக இருந்தாலும் சரி, மாநில கமிட்டியாக இருந்தாலும் சரி, எந்தக் கமிட்டி வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றார் கார்த்திக்.