பார்வர்ட் பிளாக் தலைவர் பதவியிலிருந்து கார்த்திக் நீக்கம்
மதுரை: பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கார்த்திக் இன்று அதிரடியாக நீக்கப்பட்டார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட நடிகர் கார்த்திக்கின் செயல்பாடுகள் கட்சி முன்னணியினரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
எப்போதாவதுதான் அவர் கூட்டங்களுக்கு வருகிறார். முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆரம்பத்தில் அறிக்கை விட்டுக் கொண்டிருந்த கார்த்திக் பின்னர் அதையும் நிறுத்தி விட்டார்.
இதனால் கார்த்திக்கை கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்த நிலையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மத்தியக் குழு கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. கூட்டத்திற்கு அகில இந்திய தலைவர் வேலப்பன் நாயர் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ் பேசுகையில், கட்சிக்கு வலு தர முடியும், கட்சியை வளர்க்க முடியும் என்று நம்பித்தான் கார்த்திக்கிடம் தலைவர் பொறுப்பை ஒப்படைத்தோம். ஆனால் அவருக்கும், சந்தானத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார் கார்த்திக்.
கட்சியின் நிர்வாகிகளை நீக்கி விட்டு தனக்கு வேண்டியவர்களை நியமித்து வருகிறார். இதனால் கட்சிப் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
பார்வர்ட் பிளாக் கட்சியை ஒரு கம்பெனியைப் போல கருதி நடத்திக் கொண்டிருக்கிறார் கார்த்திக். இது ஒரு அமைப்பு ரீதியான இயக்கமாக செயல்படவில்லை. தனக்குத் தரப்பட்ட வாய்ப்பை தவறாகப் பயன்படுத்தி வருகிறார். இது கட்சிக்கு விரோதமான, எதிரான செயல்பாடுகள்.
கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களைப் புறக்கணித்து வருகிறார் கார்த்திக். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. அவரை கட்சித் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறிவோம். மத்தியக் குழுவின் முடிவின்படி இடைக்கால குழு அமைக்கப்படவுள்ளது. அக்குழு எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்ற முழு சக்தியையும் ஒருங்கிணைத்து செயல்படும் என்று கூறியிருந்தார் பிஸ்வாஸ்.
இந்த நிலையில் கார்த்திக்கைத் தலைவர் பதவியிலிருந்து நீக்க மத்தியக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கார்த்திக் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக இன்று பிஸ்வாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நேற்று நடந்த மத்தியக் குழுக் கூட்டத்தில் நடிகர் கார்த்திக்கை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டது.
நேதாஜி, முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரைப் பின்பற்றும் அனைவரையும் ஒருங்கிணைப்பார் என்ற நம்பிக்கையில்தான் கட்சித் தலைவராக கார்த்திக்கை நியமித்தோம். ஆனால் அதில் அவர் சரிவர செயல்படாமல் தோல்வி அடைந்து விட்டார்.
கட்சியின் அனைத்துக் குழுக்களையும் இணைக்கும் முயற்சியிலும் அவர் அக்கறை காட்டவில்லை. கட்சி நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டுதான் தலைவர் பதவியை கார்த்திக்கிடம் கொடுத்தோம். ஆனால் அதை அவர் உணரவில்லை.
எனவேதான் வேறு வழியில்லாமல் அவரை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. கார்த்திக் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் பிஸ்வாஸ்.