பாபநாசம் மலையில் பயங்கர தீ: வனத்துறை திணறல்
நெல்லை: பாபநாசம் மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெரும் தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான பாபநாசம், முண்டந்துறை பகுதியிலுள்ள பாதர் மலை பகுதிக்குட்பட்ட பாண்டியன் கோட்டை பகுதியில் கடந்த இரு தினங்களாக தீ பிடித்து எரிந்து வருகிறது. இதில் ஏராளமான மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
இப்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் வனத்துறையினர் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். பல ஏக்கர் காடுகள் அழிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாபநாசம் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பினை பார்வையிட வனத்துறை அமைச்சர் செல்வராஜ் இன்று வருகிறார்.
இப்பகுதியில், உள்ள கிராம வனக்குழுக்களுக்கு கடன் வழங்குவதில் ஏகப்பட்ட முறைகேடு நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாபநாசம், மூண்டந்துறை வனப்பகுதியில் தீ பிடித்து எரியும் வனப்பகுதிக்கும் தொடர்பு இருக்கலாம், வனக்குழு ஊழலை திசை திருப்பும் முயற்சியாக இருக்கலாம் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.