கர்நாடக தேர்தல் இறுதி பிரசாரம் இன்றுடன் முடிந்தது
பெல்காம், பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, பீதர், கதக், தார்வாட், ஹவேரி ஆகிய 8 மாவட்டங்கள் அடங்கிய வடக்கு கர்நாடக பகுதியில் உள்ள 69 தொகுதிகளில் நடைபெற்ற உச்சக்கட்ட பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நாளை மறுநாள் இந்த தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, அனந்தகுமார், வெங்கய நாயுடு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவி சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதுபோல் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்கள் தேவெ கௌட, குமாரசாமி ஆகியோரும் தொகுவாரியாக தீவிர பிரசாரம் செய்தனர்.
கர்நாடகத்தில் இதுவரை நடந்த 2 கட்ட தேர்தல்களைவிட இந்த இறுதிக்கட்டத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் நடக்கவுள்ள 69 தொகுதிகளிலும் காங்கிரஸ், பாஜகவுக்கு சமவாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதில் அதிக சீட்டுகளை வெல்லும் கட்சிக்கு ஆட்சியைப் பிடிப்பதற்கான மெஜாரிட்டி வாய்ப்பு கிடைக்கும் என்று அரசியல் விமரிசகர்கள் கருதுகின்றனர்.
இதனால் தலைவர்களின் பிரச்சாரத்தில் அனல் பறந்தது.
இறுதி கட்டத் தேர்தல் நடக்கவுள்ள வடகர்நாடக பகுதி இம்மாநிலத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டங்களைக் கொண்டது. இத்தனை ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட பகுதி என்ற குற்றச்சாட்டு பரவலாக மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதனால் தனி மாநில கோரிக்கைகூட இப்பகுதி மக்களால் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான முன்னாள் முதல்வர் தரம்சிங், முன்னாள் உள்துறை அமைச்சர் கார்கே ஆகியோர் தங்கள் தொகுதியில் தொடர்ந்து 9வது முறையாக வென்று சாதனைபுரிவதற்காக களத்தில் உள்ளனர். அவர்களது தலைவிதியை இந்த தேர்தல் நிர்ணயிக்கிறது.
இறுதிக்கட்ட பிரசாரத்தை தேவெ கௌட ஊப்ளியில் முடித்தார். பிலிதி தொகுதியில் சுஷ்மா ஸ்வராஜ் இறுதியாக பேசினார்.
எதியூரப்பா மீது புகார்
பாஜக தலைவர் எதியூரப்பா வகுப்புவாதத்தை தூண்டும்விதமாக பேசியதால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் புகார் செய்துள்ளது.
பிஜாப்பூர் தொகுதியில் பாஜக தலைவர் எதியூரப்பா பேசுகையில் தான் முதல்வர் பதவிக்கு வந்தால் அமைச்சரவையில் முஸ்லிம் மற்றும் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் நிச்சயம் இடம்பெறுவார்கள் என்று பேசியதாகவும் இது மக்களிடையே ஜாதி, மத வேற்றுமைகளைத் தூண்டுவிதமாக இருப்பதால் அவர் மீது தேர்தல் ஒழுங்குமுறை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்சக்கட்ட பிரசாரத்தின்போது மோதல் ஏற்பட்டுவிடாமல் தடுக்க ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொகுதி முழுவதும் மத்திய துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளது.