சார்க் உறுப்பினராக மியான்மருக்கு இந்தியா ஆதரவு?
டாக்கா: சார்க் அமைப்பு உறுப்பினராக மியான்மர் நாட்டுக்கு இந்தியா ஆதரவு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (சார்க்) உறுப்பினராக சேர்த்துக் கொள்ளும்படி ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மர் நாடு கோரிக்கை விடுத்துள்ளது.
தெற்காசிய பகுதியில் உள்ள இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் சார்க் அமைப்பில் தம்மையும் சேர்த்துக்கொள்ளுமாறு சார்க் தலைமைச் செயலகத்துக்கு மியான்மர் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், சார்க் உறுப்பு நாடுகளுக்கு தமது விருப்பத்தை தெரிவித்து ஆதரவு கோரி மியான்மர் அரசு கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில் சார்க் அமைப்பின் 15வது உச்சிமாநாடு இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் ஜூலை 27ல் தொடங்குகிறது. அதற்கு முன்பு மியான்மர் அரசு கோரிக்கை பற்றி சார்க் நிலைக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று வங்கதேச வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையில் மியான்மரை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள இந்தியா ஆதரவு கரம் நீட்டியிருப்பதாக வங்கதேசத்தில் வெளியாகும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய ஆதரவை பெற்றுவிட்டால் சார்க் அமைப்பின் 9வது உறுப்பு நாடாக மியான்மர் விளங்கும். இதேபோல் சார்க் உறுப்பினராக ஆஸ்திரேலியாவும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கொரியா குடியரசு, சீனா, ஜப்பான், ஈரான், மொரீஷியஸ் ஆகிய நாடுகள் இந்த அமைப்பின் பார்வையாளர்களாக இருந்து வருகின்றன.