தாயைப் பிரிய மணமில்லாத புது மாப்பிள்ளை தற்கொலை
செங்கோட்டை: திருமணமாகி தாயைவிட்டு தனிக்குடித்தனம் செல்ல மனமில்லாமல் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து இறந்தார்.
செங்கோட்டை அருகேயுள்ள காலாங்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன் மகன் மாரியப்பன். டீக்கடை தொழிலாளி. இவரது தாய் திருமலை.
மாரியப்பனுக்கும் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்துக்குப் பிறகு மாரியப்பனை தனிக்குடித்தனம் போகுமாறு திருமலை கூறினார். ஆனால் அதற்கு மாரியப்பன் ஒப்புக்கொள்ளவில்லை. தனது தாயை விட்டுப் பிரிய மனமில்லாமல் வருத்தத்தில் இருந்தார்.
ஆனால் தனிக்குடித்தனம் பற்றி தொடர்ந்து திருமலை வலியுறுத்தியதால் மனமுடைந்த மாரியப்பன் நேற்று விஷம் குடித்தார்.
ஆபத்தான நிலையில் பாளையம்கோட்டை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட மாரியப்பன் இன்று பரிதாபமாக பலியானார்.